லண்டன்: வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்ஷி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் 14 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. தொழிலதிபர் விஜய் மல்லையாவை போல், இவர்களும் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினர். நீரவ் மோடி மீது சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் நிதி மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளன. இவரது வங்கி கணக்குகள் எல்லாம் முடக்கப்பட்டு, இவரை கைது செய்ய இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ ஆதாரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியது. இவர் லண்டனின் மேற்கு பகுதியில் சென்டர் பாய்ன்ட் டவர் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 3 படுக்கை அறை கொண்ட இவரது வீட்டுக்கு மாத வாடகை 15 லட்சம். இவரை இங்கிலாந்தின் ‘டெலிகிராப்’ பத்திரிக்கை நிருபர் அடையாளம் கண்டு அவரிடம், சில கேள்விகள் கேட்டார். இங்கிலாந்து அரசிடம் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.