பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்த ‘போலி’ போலீஸ்காரர் கைது

அண்ணாநகர்: சென்னை ஐசிஎப் பகுதியில் ஆசாமி ஒருவர் பொதுமக்களிடம் தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு பணம் பறிப்பதாகவும், ஆட்டோ டிரைவர்கள், கூலி தொழிலாளிகளிடம் வழிப்பறி செய்வதாக  பாதிக்கப்பட்டவர்கள் ஐசிஎப் காவல் நிலையத்தில் புகாரளித்து வந்தனர். இந்நிலையில் ஆவடியை சேர்ந்த சேகர் (30) என்ற தனியார் தொலைக்காட்சி ஊழியர் கடந்த 3ம் தேதி பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம் அருகே உள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். அப்போது டிப்டாப் உடையில்  வந்த ஒரு ஆசாமி தன்னை ஐசிஎப் காவல் நிலைய போலீஸ் என கூறி சேகரிடம் சோதனை செய்வது போல் நாடகமாடி ₹3000 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார்.  முன்னதாக செல்லும்போது, ‘உன்னை பிடித்து விசாரணை  செய்ததற்கு அத்தாட்சி’ என கூறி சேகரை போட்டோ எடுத்து அதை அவர் கண் எதிரிலேயே சில காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு பிறகு சேகர் ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் குற்றவியல் ஆய்வாளர் காமேஷ்வரி புகாரை வாங்க வில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதே நபர், கேரேஜ் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்ததை பார்த்த சேகர் போலீசாருக்கு தெரிவித்துள்ளார். அதற்குள் மர்ம ஆசாமி தப்பினான்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஐசிஎப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தபோது பல நாட்களாக போலீசுக்கு தண்ணிக்காட்டி வந்த  போலி ‘போலீஸ்’ என தெரிய வந்தது.

விசாரணையில் அயனாவரத்தை சேர்ந்த தமிழரசன் (35) என்பதும், ஏற்கனவே வழிப்பறி வழக்கில் 3 முறை சிறை சென்றுவிட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் தொடர் வழிபறியில் ஈடுபட்டு வருவதும், இரவு நேரங்களில்  செல்போனில் வாக்கி டாக்கி சவுண்ட் வைத்துக்கொண்டு லத்தி மற்றும் அடையாள அட்டையுடன் ரயில்வே ஊழிகள், கல்லூரி மாணவர்கள், காதல் ஜோடி என பல பேரிடம் வழிபறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தமிழரசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார்  பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: