கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்க இருந்த 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. நியூசிலாந்தில் கடந்த மாத தொடக்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி, முதலில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வந்தன. ஹாமில்டனில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து, அடுத்து வெலிங்டனில் நடந்த 2வது டெஸ்டிலும் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. நியூசிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில், கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் தொழுகை நடத்துவதற்காக வங்கதேச அணி வீரர்கள் நேற்று பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். மசூதியை நெருங்கிய நிலையில், அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதை அறிந்து பேருந்து நிறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் பேருந்துக்குள்ளேயே குனிந்து உட்கார்ந்தபடி பதற்றத்துடன் காத்திருந்தனர்.