ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத தலைவர் மசூத் அசாரின் பிரான்சில் உள்ள சொத்துக்கள் முடக்கம்

பாரீஸ் : பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் சொத்துக்களை பிரான்ஸ் அரசு முடக்கியுள்ளது.

வீட்டோ அதிகாரம் மூலம் 3 முறை சீனா முட்டுக்கட்டை

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை ஐநா சபை ஏற்கனவே சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவித்து தடை விதித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் (50), இந்தியாவில் நடக்கும் பல்வேறு நாச வேலைகளுக்கு மூளையாக இருப்பவர். இவரையும் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 3 முறை முட்டுக்கட்டு போட்டுள்ளது.

புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன.  

சீனா 4வது முறையாக முட்டுக்கட்டை

இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்த போதிலும், சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவின் நடவடிக்கைக்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டைப் போட்டது.

இந்நிலையில் பிரான்சில் உள்ள மசூத் அசாரின் சொத்துக்களை முடக்குவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகிய 3 அமைச்சகங்களும் இணைந்து கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் மசூத் அசாரை தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் ஐரோப்பிய ஒன்றியப் பட்டியலில் போடுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: