புதுடெல்லி: போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை விதித்ததால், விமான கட்டணங்கள் 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டது. போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 189 பயணிகள் இறந்தனர். இதுபோல், எத்தியோபிய தலைநகரில் இருந்து புறப்பட்ட இதே ரக விமானம் சில நாட்கள் முன்பு விபத்துக்கு ஆளானது. இதில் 4 இந்தியர் உட்பட 157 பேர் இறந்தனர். ஐந்து மாதங்களில் 2வது பெரிய விபத்து இது. இதனால், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை செய்து விட்டன. இந்தியாவில் இந்த தடை நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதை நம்பியிருந்த பயணிகள் வேறு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு வந்து விட்டனர். உதாரணமாக, மும்பை ஜெய்ப்பூர் இடையே டிக்கெட்கள் வரும் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு விட்டன.