புதுடெல்லி: இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ரூ.74.5 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஒரு நோயாளிக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சைக்கு பிறகு அவருக்கு உடல் நிலையில் பல்வேறு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. மருத்துவ ரீதியாக தீர்வு கிடைக்காததால், வழக்கு தொடர்ந்தார். ஜான்சன் நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை உத்தரவு பிறப்பித்தது. விசாரணையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஏஎஸ்ஆர் செயற்கை மூட்டு பல்வேறு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிய வந்துள்ளது. அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தொடர் தோல்விகளை அடுத்து, ஜான்சன் நிறுவனம் தான் தயாரித்த 93,000 ஏஎஸ்ஆர் செயற்கை மூட்டுகளை 2010ம் ஆண்டு திரும்பப்பெற்றது.