திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 19வது வார்டுக்கு உட்பட்ட மாத்தூர் எம்எம்டிஏ மற்றும் டிஎன்எச்பி காலனி பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பேருந்து நிலையம், சமுதாய நலக்கூடம், ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துதர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலகட்டமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தரவேண்டும், அதிகபட்ச சொத்து வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎன்எச்பி காலனி குடியிருப்போர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நலச்சங்கம் சார்பில் நேற்று மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க பொது செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், பொருளாளர் ரவி மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.