சென்னை: புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிட பிளாஸ்டிக் அட்டை ஸ்டாக் இல்லை என்பதால் கடந்த 2 வாரங்களாக பொதுமக்கள் மாநகராட்சி சேவை மையத்தால் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் வாக்களார் பட்டியல் சுருக்க திருத்த பணி கடந்த சில மாதமாக நடைபெற்றது, இதன்படி சென்னை மாநகராட்சியில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1 லட்சத்து 16 ஆயிரத்து 385 விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 104 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. மேலும் ஊழியர்களின் கள ஆய்வின் போது 4,371 பெயர்களும், தகுதியின்மை அடிப்படையில் 79,860 பெயர்களும் நீக்கப்பட்டன. தற்போதிய நிலைப்படி சென்னை மாநகராட்சியில் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் புதிதாக பெயர் சேர்த்தவர்கள், முகவரி மற்றும் பல்வேறு தகவல்களை மாற்றியவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி மண்டல அலுவலகங்களில் நடைபெற்றுவருகிறது. ஆனால் சில நாட்களாக வாக்காளர் அடையாள அட்டை அச்சிட தேவையான பிளாஸ்டிக் அட்டை ஸ்டாக் இல்லை எனக் கூறி கடந்த 2 வாரங்களாக இசேவை மையத்தால் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.