சென்னை: சலவை, மண்பாண்டம், சவரத் தொழிலாளர்கள் மேம்பட 69 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் (குலாளர்) சங்கம் சார்பில் மாநில இளைஞர் அணி எழுச்சி மாநாடு சென்னை, புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது. மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.என்.பழனி தலைமை தாங்கினார். அமைப்பாளர் டி.கோவிந்தசாமி, செயலாளர் வி.தேவராஜ் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் குமரிஅனந்தன் சிறப்புரையாற்றினார். அரு.கோபாலன், இரா.கீதா, வசீகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் சேம.நாராயணன் கூறியதாவது: கஜா புயலால் மண்பாண்ட தொழிலாளர்களின் மண் பொருட்கள் அனைத்தும் உடைந்தும், கரைந்தும் போயின. புயல் பாதித்து 3 மாதம் ஆகியும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் உரிய நிவாரண நிதி உதவிகள் முறையாக போய் சேரவில்லை.