சட்டமன்றத் தேர்தலில் என்ன செய்வாரெனப் பார்ப்போம்: ரஜினி குறித்து சீமான் விமர்சனம்

திருச்சி: நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி தொண்டர்களிடம் கூறினால் பிறகு தலைவன் எதற்கு? என ரஜினிகாந்த் அறிக்கைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு அறிக்கை வெளியானது. வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. தமிழக சட்டமன்றத்தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக்கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ, எந்தக்கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறோர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பெண்களுக்கான அரசியல் பயில் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, தலைவன் தானே வழிநடத்த வேண்டும், நாங்களே பார்த்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் சட்டமன்றத் தேர்தலில் என்ன செய்வாரெனப் பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: