* மருந்து சப்ளை அதிரடி நிறுத்தம்
* நோயாளிகள் கடும் அவதி
புதுச்சேரி சுகாதாரத்துறை மருந்து சப்ளை செய்த நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. தற்போது அந்த நிறுவனங்கள் மருந்து சப்ளை செய்வதை நிறுத்திவிட்டன. இதனால் சுகாதாரத்துறை வேறு நிறுவனங்களிலிருந்து அத்தியாவசிய மருந்துகளை மட்டும் கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது. இதன் காரணமாக, மருத்துவமனைகளில் அடிக்கடி மருந்து தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதற்காக புதுவை அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அதிக நிதியை மருத்துவத்துக்கு ஒதுக்குகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 8 பெரிய மருத்துவமனைகள், 4 சமுதாய நலவழி மையங்கள், 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தை சேர்ந்த நோயாளிகளும் புதுவைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவமனைகள் மற்றும் சமுதாய நலவழி மையங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அந்த நிதியை கொண்டு தேவையான மருந்துகளை மருத்துவமனை நிர்வாகங்களே வாங்கி, நோயாளிகளுக்கு வழங்கி வந்தன. ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மட்டும் கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தின் மூலம் மருந்துகள் வாங்கி சப்ளை செய்யப்பட்டு வந்தது. சமீப காலமாக புதுவையில் நிலவி வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க, அனைத்து துறைகளும் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்குமாறு நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, சுகாதாரத்துறையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனைகள், சமுதாய நலவழி மையங்கள் நேரடியாக மருந்து கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டு, தேவையான மருந்துகள் அரசு மருந்தகத்திலிருந்து நேரடியாக சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆண்டுதோறும் இ-டெண்டர் மூலம் மருந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிடமிருந்து மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிறுவனங்கள் சப்ளை செய்யும் மருந்துக்கான பணத்தை கொடுக்க 90 நாட்கள் வரை காலக்கெடு விதிக்கின்றன. தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நிதி என்பது பேப்பர் வடிவில் மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற சூழலில் மருந்து கொள்முதலுக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. மேலும், வாழ்க்கை முறை மாற்றத்தினால் பல்வேறு நோய்கள் பெருகி வருகின்றன. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து, மருந்துகளின் தேவையும் அதிகரித்துவிட்டது. இதுபோன்ற சூழலில் சுகாதாரத்துறை மருந்து கொள்முதல் செய்த பல நிறுவனங்களுக்கு காலக்கெடுவுக்குள் பணத்தை வழங்க முடியவில்லை. இதனால் பாக்கி தொகையானது ரூ.9 கோடியை கடந்துவிட்டது. இதற்கு மேல் கடனுக்கு மருந்து சப்ளை செய்யும் சக்தியில்லை என்ற அந்த நிறுவனங்கள் நோட்டீஸ் கொடுத்துவிட்டன. இதனால் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இப்பிரச்னையை சமாளிக்கும் வகையில், சுகாதாரத்துறையானது அத்தியாவசிய மருந்துகளை மட்டும் வேறு நிறுவனங்களில் இருந்து குறைவாக வாங்கி மருத்துவமனைக்கு சப்ளை செய்து வருகிறது. இதனால் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிக்கடி மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளிடம் இருமல், தலைவலி, அல்சர் போன்ற பாதிப்புகளுக்கு மாத்திரை இல்லையென்றால், அதனை வெளியே வாங்கி கொள்ளுமாறு மருந்தாளுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த மாத்திரைகள் விலை சற்று குறைவு என்பதால், நோயாளிகள் வெளியே வாங்கி கொள்கின்றனர். அதேவேளையில், விலை உயர்ந்த கிளினிக் சார்ந்த மருந்துகள் இல்லையென்றால், மருத்துவமனை ஊழியர்களிடம் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக நடைபெற்று வருகின்றது. தற்போது கூட ஆன்டிபயாடிக்ஸ், அல்சர் மாத்திரைகள், கிளினிக்கல் மருந்துகள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் போன்றவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாடி செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதுச்சேரி மருத்துவமனைகளில் நிலவி வரும் மருந்து பற்றாக்குறை பிரச்னையால், உயிரை காக்க வேண்டிய மருத்துவத்துறை மக்களுக்கு எமனாக மாறிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. புதுவை அரசு உடனே இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.₹4 கோடிக்கு ஒப்புதல்இதுகுறித்து சுகாதாரத்துறை உயரதிகாரியிடம் கேட்டபோது, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருந்துகள் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படுகிறது. புதுவையிலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மருந்து கொள்முதல் செய்வதற்கு உதவ முன்வர வேண்டும். மேலும், மருந்து சப்ளை செய்த நிறுவனங்களுக்கான நிலுவை தொகையை வழங்க ரூ.4 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களுக்கு விரைவில் நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரம் குறைந்ததுராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை பல மாதங்களாக நிலவி வருகிறது. இதனால் பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் ரத்த போக்கை நிறுத்தக் கூடிய மெத்தர்ஜின் என்ற ஊசி ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் வழங்குகிறது. அதற்கு மேல் பிரசவங்கள் நடைபெறும்போது ஊசி இல்லாமல், மிசோ என்ற மாத்திரை மூலம் ரத்தப்போக்கை நிறுத்தும் அவலநிலை உள்ளது. மேலும், பிரசவம் பார்க்கும் செவிலியர்களுக்கான கையுறை (க்ளவுஸ்), மாஸ்க் போதிய அளவு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் பல கர்ப்பிணிகள் ஜிப்மரை நோக்கி படை எடுக்கின்றனர். இதேபோல் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை தரம் குறைந்துவிட்டது. இதன் காரணமாக, பொது மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையம் என பலரும் விமர்சிக்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி