நடிகை கங்கனா ரனாவத் ஆவேசம் திரையுலகில் தேசத் துரோகிகள்: பாகிஸ்தானை நிர்மூலமாக்க வலியுறுத்தல்

மும்பை: , ‘‘நாட்டை காட்டிக் கொடுக்கும் தேசத் துரோகிகள் திரையுலகில் அதிகரித்து விட்டார்கள்’’ என்று பிரபல நடிகை  கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மியின் தந்தை மறைந்த கைபி ஆஸ்மியின் கவிதை, கட்டுரைகள் குறித்த 2 நாள் இலக்கிய நிகழ்ச்சி பாகிஸ்தானின்  கராச்சி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதில் ஷபானா ஆஸ்மியும், அவரது கணவரான கவிஞர் ஜாவேத் அக்தரும்  கலந்து கொள்ள இருந்தனர். ஆனால், புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதால், தங்களின் கராச்சி பயணத்தை இருவரும் ரத்து செய்தனர். ஆனால், கராச்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலில் சம்மதம் தெரிவித்ததற்காக ஷபானா ஆஸ்மி, ஜாவேத் அக்தருக்கு பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் இடையே கலாசார உறவுகள் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும் என பேசுபவர்கள்தான் ஷபானாவும், ஜாவேத் அக்தரும். இந்தியாவை துண்டு துண்டாக்குவோம் என்று கொக்கரிக்கும் கும்பலில் இவர்களும் ஒருவராக இருக்கிறார்கள். உரி ராணுவ முகாம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், கராச்சி நிகழ்ச்சிக்கு அவர்கள் செல்ல சம்மதித்தது தவறு. இப்போது தங்களை தற்காத்துக் கொள்வதற்காக கராச்சி பயணத்தை ரத்து செய்வதாக நாடகமாடுகிறார்கள். தேசத் துரோகிகள் திரையுலகில் அதிகரித்து விட்டார்கள். ஆனால், இப்போது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பாகிஸ்தானுக்கு தடை விதித்தால் மட்டும் போதாது. அந்த நாட்டையே நிர்மூலமாக்க வேண்டும்’’ என்றார்.

கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

நடிகை கங்கனா ரனாவத்தின் கடுமையான விமர்சனம் குறித்து ஷபானா ஆஸ்மியிடம் கேட்டதற்கு, ‘‘புல்வாமாவில் நடந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்தால் ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சோகமான தருணத்தில் தனிப்பட்ட ரீதியில் அவர் என்னை விமர்சித்திருக்கிறார். அவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: