துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தலைமையில் 4-வது நாளாக தர்ணா போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநரை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் 4-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் 13ம் தேதியில் இருந்து கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இவர்களை கண்டுகொள்ளாமல் நேற்று முன்தினம் ராஜ்நிவாசில் இருந்து கவர்னர் கிரண்பேடி வெளியேறி, சென்னை சென்றார்.

பின்னர், அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முதல்வர், அமைச்சர்களை புறக்கணித்து வெளியேறியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் நேற்று மாலையில் ஆலோசனை நடத்தினார். இதுபற்றி நாராயணசாமி கூறுகையில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் உண்ணாவிரதம், சிறை நிரப்பும்  போராட்டம் என போராட்டம் தீவிரப்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 12 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், நாளை (17ம் தேதி) 30 தொகுதிகளில்  கருப்பு கொடி ஏற்றப்படும். 18ம் தேதி கிரண்பேடியை கண்டித்து குடியரசு  தலைவர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடக்க உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். 21ம்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: