நாக்பூர்: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்னேவர் அபார சதம் அடிக்க விதர்பா அணி முதல் இன்னிங்சில் 425 ரன் குவித்து முன்னிலை பெற்றது.ரஞ்சி சாம்பியன் விதர்பா, இதர இந்தியா அணிகளுக்கு இடையேயான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. 5 நாள் டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய இதர இந்தியா முதல் இன்னிங்சில் 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்ததாக களமிறங்கிய விதர்பா 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்களுடன் இருந்தது. வட்கர் 50, கர்னேவர் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கர்னேவர் விரைவாக ரன் சேர்க்க விதர்பா அணி 300 ரன்களை எட்டியது. வட்கர் 73 ரன் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுறையில் வால்வரிசை வீரர்கள் துணையுடன் கர்னேவர் அபார சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவர் 133 பந்தில் 2 சிக்சர், 13 பவுண்டரியுடன் 102 ரன் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் வெளியேறினார். விதர்பா அணி முதல் இன்னிங்சில் 425 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.