அலகாபாத் செல்ல முயன்ற அகிலேஷை ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தியது போலீஸ்: சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கண்டனம்

லக்னோ: அலகாபாத் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதி ஏற்பு விழாவுக்கு செல்ல முயன்ற சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோ விமான நிலையத்தில் ேபாலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது  ஜனநாயக விரோதம் என சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் பல்கலையில் மாணவர் உறுதி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் உள்ள சவுத்ரி சரண்  சிங் விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அகிலேஷ் வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘மாணவர் தலைவரின் உறுதி ஏற்பு நிகழ்ச்சியை கண்டு அரசு பயப்படுகிறது. அதனால் நான் அலகாபாத் செல்வதை தடுப்பதற்காக, போலீசார் என்னை மறித்துள்ளனர்’’ என்று கூறினார்.இந்த விவகாரம் உ.பி சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் நேற்று எழுப்பப்பட்டது.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பா.ஜ அரசின் சர்வாதிகாரத்துக்கு இது ஒரு உதாரணம். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணியை கண்டு பா.ஜ  பயப்படுகிறதா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: