புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை அதிகரித்துள்ளது, மக்களவை தேர்தலில் பாஜ வெற்றியை பாதிக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவை தொகை ₹20,000 கோடிக்கு மேல் இருந்தது. மக்களவை தேர்தல் சமயத்தில் இந்த தொகை 70 சதவீதம் உயர்ந்து ₹35,000 கோடியை எட்டும் அபாயம் உள்ளது என சர்க்கரை ஆலைகள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக நாட்டின் மொத்த கரும்பு உற்பத்தியில் 75 சதவீதம் பாஜ ஆளும் உ.பி., மகாராஷ்டிரா மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் 2.5 கோடி கரும்பு விவசாயிகள் உள்்ளனர். இவை தவிர, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும் கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. சந்தையில் தேக்கநிலை காரணமாக உத்தர பிரதேசத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், கரும்புக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்தினால் மட்டுமே கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை செலுத்த முடியும் என்று சர்க்கரை ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மாநில அரசு ஏற்கவில்லை. இதனால் மக்களவை தேர்தலில் பாஜவின் வெற்றி வாய்ப்பு பாதிக்குமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.