சேமிக்க சிறந்த வழி எது?

சேமிப்பு இல்லாத குடும்பம். கூரை இல்லாத வீடு என்பார்கள். யதார்த்தமோ வேறாக இருக்கிறது. விற்கிற விலைவாசிக்கும் வரும் வருமானத்துக்கும் எங்க போய் சேமிப்பது. வர்ற காசெல்லாம் கைக்கும் வாய்க்கும் முழம் போடவே காண மாட்டேங்குது என்பதுவே பெரும்பாலான மத்தியதரக் குடும்பங்களின் நிலையாய் இருக்கிறது. ஆனால், வருமானத்தில் பெரிய வருமானமே செலவைக் குறைப்பதுதான் என்று சொல்வார்கள். அப்படி, பட்ஜெட் போட்டு செலவழித்தால் எப்படிப்பட்ட செலவாளியான குடும்பஸ்தர்களாலும் ஒரு சிறுபகுதியையாவது சேமிக்க முடியும் என்பதே உண்மை. காலம் ஜெட் வேகத்தில் பயணித்தால் விலைவாசி ராக்கெட் வேகத்தில் பயணிக்கும் இக்காலத்தில் திடீரென ஏற்படும் அவசர செலவுகளை எதிர்கொள்ள சேமிப்பு மிக மிக அவசியம்.நம்மில் பலருக்கும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், சேமித்த காசை எதில் போட்டு வைக்க என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. போட்ட பணம் திரும்பக் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயமும், சேமிப்பதற்கான வழிமுறைகள் பற்றிய அறியாமையுமே இதற்கான அடிப்படை காரணம். வாருங்கள் சேமிப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன என்று பார்ப்போம்.

சிறுவாட்டுச் சேமிப்பு

மக்களின் பழங்கால சேமிப்பு முறை இது. தன் கையில் புழங்கும் பணத்தில் 10, 50, 100 ரூபாய் எனக் கொஞ்சம் கொஞ்சமா இல்லத்தரசிகள் ரகசியமா சேமிக்கும் இந்தச் சேமிப்புதான், குடும்பத்தின் அவரசத் தேவைக்குக் கைக்கொடுக்கும். வங்கி கணக்கே இல்லாத பெண்களும் இன்றைக்கும் இந்தச் சேமிப்பை மேற்கொள்கிறார்கள். ஆனால், இந்த வகையில் மாதந்தோறும் 100 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்குச் சேமிக்கிறீர்கள் எனில், சேமிப்பின் முடிவில் 2,400 ரூபாய் மட்டுமே கிடைக்கும். மிகக்குறைந்த தொகை மற்றும் குறுகிய காலச் சேமிப்புக்கு இந்த முறை உகந்தது. கடந்த ஆண்டு நீங்கள் ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வாங்கியிருப்பீர்கள். அந்தப் பொருள் இப்போது 110 ரூபாய்க்கு விற்கப்படும். வாங்கிய பொருளும் அதன் தரமும் ஒன்றுதான். ஆனால், 10 ரூபாய் கூடியிருக்கும். காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருள்கள், ஆடைகள், பள்ளிக் கட்டணம், எரிபொருள் விலை என எல்லாப் பொருள்களிலும் இந்த விலையேற்றம் ஆண்டுதோறும் கூடியிருக்கும். அந்தக் கூடுதல் தொகைதான் பணவீக்கம் (Inflation). தற்போது, சராசரியாக 6 % பணவீக்கம் உள்ளது.

பொதுவாக, பணவீக்கத்தைத் தாண்டிய லாபத்தைக் கொடுப்பதே சிறப்பான சேமிப்பு. அதன்படி, மாதம்தோறும் 500 மற்றும் 1000 ரூபாய்க்கு அதிகமான தொகை மற்றும் நீண்ட கால சேமிப்புக்கு, சிறுவாட்டுச் சேமிப்பு முறை உகந்தது இல்லை. இந்த சேமிப்பு முறையின் பலம் என்னவென்றால் காசு நம்மிடமே இருக்கும் என்பதால் உடனடியாக அவசரத் தேவைகளை எதிர்கொள்ள முடியும். சேமித்த பணத்துக்கு பூரண உத்தரவாதம் உண்டு. ஆனால், பணவீக்கத்தைக் கடந்த லாபம் இந்த சேமிப்பால் கிடைக்காது என்பதுதான் இதன் பெரிய மைனஸ். மாதந்தோறும் ஐநூறு ரூபாய்க்கு அதிகமாக சேர்க்க முடியும் என்றால் அடுத்தகட்ட சேமிப்புமுறைகளை யோசிப்பதே நல்லது.நினைத்த நேரத்தில், இந்தச் சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தலாம். சேமிப்புப் பணத்துக்கு நிச்சய உத்தரவாதம் உண்டு.

தபால் நிலைய சேமிப்பு

வங்கிப் பயன்பாட்டுக்குப் பழக்கப்படாத காலம் வரையில், தபால் நிலைய சேமிப்பைத்தான் மக்களில் பலரும் மேற்கொண்டார்கள். தபால் நிலையத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான சேமிப்புத் திட்டம் கிடையாது. ஐந்தாண்டு சேமிப்பில் தற்போது 6.9 சதவீதம் வட்டி தரப்படுகிறது. உதாரணத்துக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஐந்தாண்டுகள் சேமிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சேமிப்புக் கால முடிவில் காலாண்டு கூட்டு வட்டியுடன் உங்களுக்கு 71,743 ரூபாய் கிடைக்கும்.

தபால் நிலைய சேமிப்பில் அதிகபட்சமாக ஒன்பது ஆண்டுகள், பத்து மாதங்கள் கொண்ட நீண்ட கால சேமிப்பை மேற்கொள்ளலாம். இதை, ‘கிஷான் விகாஸ் பத்ரா’ திட்டம் என்பார்கள். இந்த ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்பில் தற்போது 7.7 சதவீத வட்டி தரப்படுகிறது. சேமிப்புக் காலம் முடிந்ததும், பணத்தை எடுத்துத் தேவைப்பட்டால் புதிய சேமிப்பைத் தொடங்கலாம். அல்லது, நம் சேமிப்பை புதுப்பித்துக்கொண்டு மீண்டும் மாதம்தோறும் அதே தொகையில் சேமிப்பைத் தொடரலாம். நிலையான நீடித்த சேமிப்புக்கு தபால் நிலைய சேமிப்பு மிகச் சிறந்த வழிமுறை. ஆனால் வட்டி விகிதம் இதில் குறைவு என்பதுதான் இதன் பெரிய குறை. அதிக வட்டி வேண்டும் என்று விரும்புவர்கள் இதற்கு அடுத்த நிலையில் உள்ள சில சேமிப்புகளை மேற்கொள்ளலாம்.

வங்கி சேமிப்பு

பாதுகாப்பு, அளவான வட்டி என்ற இரண்டு காரணங்களால் வங்கிச் சேமிப்பை பலரும் மேற்கொள்கிறார்கள். குறுகிய கால வங்கிச் சேமிப்பாக, ரெக்கரிங் டெபாசிட்டில் சேமிக்கலாம். இந்தச் சேமிப்புக்கு தற்போது 6.65 சதவீத வட்டி தரப்படுகிறது. அதன்படி மாதம் ஆயிரம் ரூபாய் என இரண்டு ஆண்டுக்குச் சேமிப்பதாக வைத்துக்கொள்வோம். சேமிப்பின் முடிவில் 25,735 ரூபாய் கிடைக்கும். வங்கியில் மூன்று ஆண்டுக்கும் மேலாக எத்தனை ஆண்டு காலம்கொண்ட நீண்ட கால சேமிப்பாக (ஃபிக்ஸட் டெபாசிட்) இருந்தாலும், ஆறரை சதவீத வட்டிதான் தரப்படுகிறது. வங்கி சேமிப்பிலும் வட்டி விகிதம் குறைவு என்பது மைனஸ். ஆனால், இதில் பணத்துக்கு முழுப் பாதுகாப்பு உள்ளது.

மியூச்சுவல் ஃபண்டு

தற்போதைய விலைவாசி ஏற்றத்துக்கு, மியூச்சுவல் ஃபண்டுதான் மிகச் சிறந்த சேமிப்பு (மார்க்கெட் ரிஸ்க் உண்டு). இந்த வகை சேமிப்பு பங்குச் சந்தையுடன் தொடர்புடையது. இதனால், இந்தச் சேமிப்பில் நமக்குப் பெரிய அனுபவமோ, புரிதலோ இல்லை என்றாலும், நம்பகமான நிதி ஆலோசகரை அணுகி விளக்கம்பெற்று சேமிக்கலாம். லிக்விட் ஃபண்டு (liquid fund), பேலன்ஸ்டு ஃபண்டு (balanced fund) எனப் பல வகையான ஃபண்டு வகைகள் உள்ளன. நம் தேவை, ஃபண்டு வகை, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து, தேவையான ஃபண்டினை தேர்வுசெய்யலாம். தற்போது, குறுகிய கால சேமிப்புக்கு பேலன்ஸ்டு ஃபண்டு நல்ல சாய்ஸ். அதில் மாதம்தோறும் எட்டு சதவீத வட்டியை எதிர்பார்க்கலாம். இதன்படி, உதாரணத்துக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகள், பேலன்ஸ்டு ஃபண்டில் சேமிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

முடிவில், உங்கள் சேமிப்புத் தொகை 26,028 ரூபாயாக உயர்ந்திருக்கும். பணவீக்கத்தைத் தாண்டிய நல்ல பலனை மியூச்சுவல் ஃபண்டு சேமிப்பில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.தற்போது, நீண்ட கால சேமிப்புக்கு ஈக்விட்டி ஃபண்டு (equity fund) சிறந்தது. இதில் குறைந்தபட்சம் பனிரெண்டு சதவீத வட்டியை எதிர்பார்க்கலாம். ஆனால், மாறுபாடு நிச்சயம் இருக்கும். மியூச்சுவல் ஃபண்டு சேமிப்பில், நீண்ட கால சேமிப்புதான் மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய ஏற்ற இறக்கங்கள் உண்டாகலாம். பொறுமை தேவை.  பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. நாம் தேர்ந்தெடுக்கும் நிறுவனம், முதலீடு செய்யும் திட்டம் ஆகியவற்றுக்கு ஏற்ப இதன் திரும்ப வரும் பணத்தின் அளவு மாறுபடும். முதலீட்டுக்கு ரிஸ்க் அதிகம் உள்ள சேமிப்புதான் இது என்றாலும் இதன் வட்டி விகிதம் அதிகம் என்பதால் நல்ல ரிட்டர்ன்ஸ் எதிர்பார்க்கலாம்.

ஷேர் மார்க்கெட்

பங்குச் சந்தையில் நேரடியாகவோ அல்லது நிதி ஆலோசகர் மூலமாகவோ சேமிப்பை மேற்கொள்வது இந்த முறை. ஷேர் மார்க்கெட்டில், குறுகிய கால சேமிப்பைச் செய்யலாம். ஆனால், இந்தச் சேமிப்பில் ரிஸ்க் மிக மிக அதிகம். அதேபோல பலனும் அதிகம் கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் ஷேர், அப்போதைய ஷேர் மார்க்கெட் சூழல், பொருளாதார நிலையைப் பொறுத்து நமக்குக் கிடைக்கும் தொகையும் மாறுபாடும். அதனால், நீண்ட கால சேமிப்புதான் சிறந்தது. இந்தச் சேமிப்பிலும் தெளிவு மற்றும் பொறுமை மிக அவசியம். இந்தச் சேமிப்பில் உத்திரவாதமான லாபத்தைச் சொல்ல முடியாது. சிலர், லாபம் நூறு சதவீதம் உத்திரவாதம் என்று துண்டைப் போட்டுத் தாண்டுவார்கள். நம்பிவிடாதீர்கள். சந்தை அபாயங்கள் நூறு சதவீதம் நிரம்பிய சேமிப்பு முறை இது. ஒப்பீட்டளவில் ம்யூச்சல் ஃபண்டைவிட சந்தை அபாயங்கள் அதிகம் என்பதால் ரிட்டர்ன்ஸும் அதைவிட அதிகம். இதுவே இதன் பிளஸ் மற்றும் மைனஸாக இருக்கிறது.

- இளங்கோ கிருஷ்ணன்

எது எதற்கு கை கொடுக்கும்?

பள்ளிக் கட்டணம், வாகனம் வாங்குவது, மருத்துவச் செலவு உள்ளிட்ட ஒன்று முதல் ஐந்து  ஆண்டுகளுக்குள்ளான தேவைகளுக்கு குறுகிய காலச் சேமிப்புகளை மேற்கொள்ளலாம். நிலம் வாங்குதல், வீடு வாங்குதல், பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பு, திருமணம், ஓய்வுக் காலம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு நீண்ட கால சேமிப்புதான் கைகொடுக்கும்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

மத்திய அரசால் பெண் குழந்தைகளின் நலனுக்கு எனக் கொண்டு வரப்பட்ட சேமிப்புத் திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (Sukanya Samruddhi Yojana). இத் திட்டத்தைத்ன் தமிழ்நாட்டில் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்கிறார்கள். 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும். இத்திட்டத்தின் கீழ் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமான கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. தற்போது இந்தக் கணக்கின் பழைய விதி முறைகளில் இருந்து சிலவற்றை மாற்றியமைத்துள்ளார்கள்.

ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும். இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்தப் பெண் குழந்தை கண்டிப்பாக இந்தியக் குடியுரிமை பெற்றிருத்தல் வேண்டும். ஒருவேளை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது அதோடு கணக்கும் உடனடியாக மூடப்படும்.  

கணக்கைத் திறப்பதில் இருந்து பதினைந்து ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய இயலும். இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதிகபட்ச முதலீட்டு காலமாக பதினான்கு வருடங்களே இருந்தது. பணம் மற்றும் செக் வாயிலாக பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லாமல் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கித் தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.

சிறு சேமிப்பு திட்டம் போல செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக்கொண்டே வரும். 2018 ஜனவரி 1 முதல் 8.1 சதவித வட்டி விகிதம் லாபம் அளிக்கப்பட்டுவருகிறது. இந்தக் கணக்குகளை துவங்குபவர்கள் ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் தவணையை தவறாமல் கணக்கில் செலுத்த வேண்டும். ஒரு வேளை தவறினால் வட்டி குறைந்துவிடும்.குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும். அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்தால் அந்தத் தொகைக்குக் கூடுதல் வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. மேலும், கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம்.

ஒருவேளை கணக்கைத் தொடராது போனால் என்ன ஆகும்? குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்துக்கு நான்கு சதவீதம் மட்டுமே பெற இயலும். ஒருவேளை இடையில் நிறுத்தப்பட்ட கணக்கை ஒருவர் மீண்டும் தொடங்க விரும்பினால் ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு கணக்கினை மீண்டும் துவங்கலாம். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் குழந்தைகள் பேரில் முதலீடு செய்யும் தொகைக்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம்.

இந்தக் கணக்கு 21 வயது ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்துவிடும். அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது. ஆனால், செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது கணக்கை மூடும் வரை வட்டி அளிக்கப்படும் என்று இருந்தது.

கணக்கை வேறு வங்கிக்கோ அல்லது வேறு தபால் நிலைய கிளைக்கோ மாற்ற விரும்பினால் நூறு ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். இதற்கு, வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். முன்பு, ஒருவர் ஐம்பது சதவீதம் வரை திரட்டப்பட்ட தொகையில் இருந்து பதினெட்டு வயது நிரம்பியதற்கான சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களை செலுத்தி செலவுக்காகப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று இருந்தது. தற்போது, எவ்வளவு தொகை கட்டணமாகச் செலுத்தியிருக்கிறோமோ அதை மட்டுமே பெற இயலும்.

மொத்தமாக எடுக்க வேண்டும் என்றால் ஐந்து தவணையாக எடுத்துக்கொள்ளலாம். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு அல்லது திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு மொத்த தொகையையும் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் இதற்கு 18 வயது நிறைவடைந்த சான்றிதழ் சமர்ப்பித்தல் வேண்டும்.   முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுதல் என்பது இத்திட்டத்தில் முன்பு எப்போது வேண்டும் என்றால் சாத்தியம் என்று இருந்தது.

ஆனால், இப்போது குறைந்தது ஐந்தாண்டுகள் நிறைவு செய்த பிறகே கணக்கை மூட இயலும். சில சமயங்களில் ஏதேனும் மருத்துவ உதவி, நோய், காப்பாளரின் மரணம் போன்ற சில காரணங்களின் போது முன்பாகவே பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளின் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். 18 வயது நிரம்பி திருமணம் செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தின் கீழ் கணக்கை மூடிவிட்டு முதிர்வு தொகையினை பெற முடியும். கணக்கை மூடும் நேரத்தில் அடையாள அட்டை, வீட்டு முகவரி சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: