பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: கலாம் சாட், மைக்ரோசாட்-ஆர் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட் நாளை இரவு 11.40 மணிக்கு விண்ணில் பாய்கிறது. பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட் மூலம் வனப்பகுதி, வேளாண்மை, உள்நாட்டு நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க ‘ஹைசிஸ்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் செயற்கைக்கோளுடன் வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமான நிலைநிறுத்தப்பட்டன.   

இதைதொடர்ந்து, ஹாம் ரேடியோ சேவைக்காக மாணவர்கள் தயார் செய்த சிறிய ரக கலாம் சாட் மற்றும் இஸ்ரோ தயாரித்த மைக்ரோசாட்-ஆர் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ நாளை இரவு 11.40 மணிக்கு விண்ணில் ஏவ உள்ளது.  4 நிலைகளை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 274.12 கி.மீட்டர் தூரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்த வருடத்தில் இஸ்ரோ விண்ணில் செலுத்தும் முதல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் இது 46வது ராக்கெட். இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் இன்று மாலை தொடங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: