சென்னை: சென்னை புறநகரில் உள்ள பல்வேறு நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் புக்ராஜ் ஜெயின் என்பவருக்கு சொந்தமான பிரகாஷ் தங்க மாளிகை, அவரது சகோதரர் சுரேஷ்குமார் ஜெயின் என்பவருக்கு சொந்தமான ராகுல் தங்க மாளிகை மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான ராசி ஜூவல்லரி, அம்பிகா ஜூவல்லரி ஆகியவை உள்ளன. அதேபோன்று கேளம்பாக்கம் காவல் நிலையம் எதிரில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான சித்ரா ஜூவல்லரி என்ற நகைக்கடையும் உள்ளது. இந்நிலையில் தாம்பரம் வருமான வரித்துறை அலுவலகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று பகல் 12 மணி முதல் மேற்கண்ட ஐந்து கடைகளிலும் திடீர் சோதனை நடத்தினர்.கடைகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை வாங்கியது குறித்தும், அதற்கான ரசீது உள்ளதா, நகைகள் கணினி ரசீது மூலம் வழங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா, அவற்றிற்கு முறையாக கணக்கு பராமரிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த கடைகளுக்கு தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் வரவே கடைக்கு வெளியே இன்று கடை விடுமுறை என்றும் இன்று விற்பனை கிடையாது என்றும் கையால் எழுதி ஒட்டி வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பினர்.