அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் பயங்கரம் ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை: சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளுக்கு வலை

சென்னை: அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேடு, நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (38). இவருக்கு மனைவி மற்றும் மகள், மகன் உள்ளனர். மகள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். குமரேசன் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 மாதங்களுக்கு முன்பு சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி யுவராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் குமரேசன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்துள்ளார். 20 நாட்களுக்கு முன்பு குமரேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

இதை தெரிந்துகொண்ட குமரேசனின் எதிரிகள் சிலர் அவரை கொலை செய்வதற்காக நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை குமரேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரும், யுவராஜ் கொலை வழக்கிற்காக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு, சூளைமேடு நோக்கி வந்துள்ளனர்.  அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரி அருகே காலை 11.30 மணியளவில் அவர்கள் வந்தபோது, அங்குள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு போகலாம் என்று நினைத்து ஆட்டோவில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது முன்விரோதம் காரணமாக பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் குமரேசனை வெட்டுவதற்கு ஓடி வந்துள்ளனர்.

அதைப்பார்த்த குமரேசன் அவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று கல்லூரிக்குள் செல்ல வேண்டும் என்று நினைத்து எதிர் திசை நோக்கி ஓடினார்.  மர்மநபர்களும் அவரை விடாமல் தொடர்ந்து விரட்டியுள்ளனர். ஆனால் எதிரே தடுப்பு சுவர் இருந்ததால் அவரால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை அதற்குள் மர்ம நபர்கள் 3 பேர் சேர்ந்து குமரேசனை வங்கி ஏடிஎம் முன்பு சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குமரேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

 நடந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

அரும்பாக்கம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 பட்டபகலில் கல்லூரி முன்பு ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: