எண்ணிக்கை குறைகிறது; பிரீமியம் உயர்கிறது பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தால் யாருக்கு பலன்?

* இழப்பீடு மிக தாமதம் என்கின்றனர் விவசாயிகள்

* நிறுவனங்களுக்குதான் லாபம் என குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரும் விவசாயிகள் குறைந்து வருகிறது. இந்த திட்டத்தால் காப்பீடு நிறுவனங்களுக்குதான் கொள்ளை லாபம் கிடைக்கிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகளுக்கு புதிய பயிர் காப்பீடு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். 2015ம் ஆண்டு காரிப் பருவத்தில் 3.09 கோடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். 2016ம் ஆண்டு  காப்பீடு திட்டம் அறிமுகம்  செய்தபோது இந்த எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் அதிகரித்தது. அதாவது 4.03 கோடி பேர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தனர் என வேளாண் அமைச்சக புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால், இயற்கை பேரிடர் உட்பட பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் இந்த திட்டத்தில் காப்பீடு பலனுக்கு விண்ணப்பித்தால், இவற்றை ஆய்வு செய்யும் பணிகள் மிக தாமதமாகவே  நடக்கிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், காப்பீடு பலனும் மிக தாமதமாகவே கிடைக்கிறது. அதாவது, காப்பீடு பலன் கிடைக்க சுமார் 6 மாதம் முதல் 9 மாதங்கள் ஆகின்றன என விவசாயிகள் தரப்பில்  கூறப்படுகிறது.

 இதனால் அடுத்த ஆண்டில் இருந்தே இந்த காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2017ம் ஆண்டில் பிரதமர் பயிர்காப்பீட்டில் 3.48 கோடி பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். 2018ம் ஆண்டில் இது  3.33 கோடியாக குறைந்து விட்டது. 2017ம் ஆண்டு மத்தியில் இருந்து விவசாய கடன்கள் பல தள்ளுபடி செய்யப்பட்டதும் பயிர் காப்பீட்டில் சேர்வோர் எண்ணிக்கை சரிவுக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.  விவசாயிகள் ஆர்வம் குறைந்து வருவது ஒரு புறம் இருக்க, இதற்கு மாறாக, பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் மாநிலங்கள் பங்களிப்பு கனிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதனால், இந்த திட்டம் விவசாயிகளை விட  காப்பீடு நிறுவனங்களுக்குதான் பலன் தருகிறது என விவசாய சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது. 2015-16 நிதியாண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியமாக ₹5,614 கோடி வசூலித்துள்ளன. 2016-17 நிதியாண்டில் இது ₹22,362 கோடியாகவும், 2017-18 நிதியாண்டில் இது ₹25,046 கோடியாகவும்  அதிகரித்துள்ளது. சம்பா மற்றும் குறுவை பயிர் காப்பீடுகள் இரண்டும் இதில் அடங்கும். மேற்கண்ட புள்ளி விவரங்கள், பயிர் காப்பீடு சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களுக்கே லாபத்தை  குவிக்கின்றன என்பதை மெய்ப்பிப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.

* 2015ம் ஆண்டு 3.09 கோடி விவசாயிகள் பயிர்க்காப்பீடு திட்டத்தில் சேர்ந்தனர்.

* 2016ம் ஆண்டு காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்து 4.03 கோடி ஆக இருந்தது.

* 2017ம் ஆண்டு காப்பீட்டில் சேரும் விவசாயிகள் எண்ணிக்கை 3.48 கோடியாகவும், 2018ல் 3.33 கோடியாகவும் சரிந்தது.

* காப்பீடு நிறுவனங்கள் 2015-16ல் ₹₹5,614 கோடி, 2016-17 ₹22,362 கோடி, 2017-18 ₹25,046 கோடி பிரீமியம் வசூலித்துள்ளன.

நம்பிக்கை இழந்த விவசாயிகள்

  பயிர்க்காப்பீடு திட்டங்களை வங்கிகள் மூலம் காப்பீடு நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. பயிர்க்கடன் வாங்கும் விவசாயிகளிடம் கடன் தொகையில் இருந்து பிரீமியத்தை வங்கிகள் எடுத்துக்கொள்கின்றன. காப்பீடு  வேண்டுமா என்பதை விவசாயிகளிடம் வங்கிகள் கேட்பதில்லை. அதோடு, பயிர்கள் சேதம் அடைந்தால் அவற்றை ஆய்வு செய்ய போதுமான கள அதிகாரிகள் இல்லை. எனவே, இழப்பீட்டை சரியாக மதிப்பீடு செய்வது சவாலான  பணியாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் காப்பீடு திட்டங்கள் மீதான விவசாயிகள் நம்பிக்கை குறைந்து வருகிறது என சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: