சென்னை: வருமான வரித்துறை நடவடிக்கைகளை எதிர்த்து, டிடிவி.தினகரன் தாக்கல் செய்த வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1995 முதல் 97ம் ஆண்டு வரை டிடிவி.தினகரன் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மறுஆய்வு செய்ய வருமான வரித்துறை கடந்த 2001 அக்டோபர் 8ம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக்கோரி, டிடிவி.தினகரன் உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளில் செய்த முதலீடுகளை மறைத்ததாக தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில், பல முக்கிய ஆவணங்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. இதையடுத்து, டிடிவி. தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மனுதாரர் டிடிவி.தினகரன் வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என உத்தரவிட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தார்.