கழிவறை கட்டித்தராத தந்தை மீது போலீசில் புகார்: 7 வயது சிறுமிக்கு மத்திய அரசு விருது?

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் இஹஸ்ஸானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா(7). 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹனீபா ஜாரா, ஆம்பூர் போலீசில் தனது தந்தை மீது கழிவறை கட்டித்தராமல் காலம் கடத்துவதால் அவரை கைது செய்ய வேண்டும் என்ற புகார் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுதொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானதும், மாவட்ட நிர்வாகம் சிறுமியின் வீட்டுக்கு கழிவறை கட்டித்தர உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. அத்துடன் சிறுமி ஹனீபா ஜாராவின் செயலை பாராட்டி ஆம்பூர் நகராட்சி தூய்மை இந்தியா இயக்க தூதுவராக நியமித்தது.தற்போது இச்சிறுமியின் விவரங்களை மத்திய அரசின் கிராம குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தூய்மை இந்தியா திட்ட இயக்குனரகம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளது. இதையடுத்து சிறுமி ஹனீபா ஜாராவின் முழு விவரங்களையும் அவரது புகைப்படத்துடன் மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்தது. இதுதொடர்பாக கலெக்டர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, ‘சிறுமியின் செயல் அனைவருக்கும் கழிவறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், அவருக்கு ஏதாவது விருது வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கலாம்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: