கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. அப்படி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமெனில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே அதிபர் தன்னிச்சையாக செயல்பட்டு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்றும் அந்நாட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கை உச்சநீதிமன்றத்தி்ன் 7 நீதிபதிகள் கொண்ட அமைப்பு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். 7 நீதிபதிகளும் கருத்து வேறுபாடின்றி ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.