மாஸ்கோ: ரஷ்யாவில் 50க்கும் மேற்பட்ட பெண்களை கொலை செய்த மிக்ஹெய்ல் பப்கோவ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அங்காஸ்க் பகுதியை சேர்ந்த போலீசான மிக்ஹெய்ல் பாப்கோவ், 1992 முதல் 2007 வரை 56 பெண்களை கொலை செய்துள்ளார். இரவு நேரத்தில் தனது காரில் லிஃப்ட் கேட்டு வரும் பெண்களை சுத்தியல் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்து வந்துள்ளார். பின்னர் அவர்களின் உடல்களை அங்காஸ் நகரின் சாலை ஓரமாகவோ அல்லது இடுகாட்டிலோ புதைப்பதை வழக்கமாக் கொண்டு வந்துள்ளார். கொலை செய்யப்பட்ட அனைவரும் 16 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள். இதில் 10 பெண்களை பலாத்காரம் செய்தும் கொலை செய்துள்ளார்.
இந்த கொலைகள் குறித்து கடந்த 2012ம் ஆண்டு ரஷ்ய போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் மிக்ஹெய்ல் போப்கோவ் 22 பெண்களின் கொலைக்கு காரணமானவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரஷ்ய நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. பின்னர் தொர்ந்து விசாரணை நடத்தி வந்ததில் மேலும் 34 பெண்களின் கொலைக்கு அவர் காரணம் என்று ரஷ்ய போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில் மிக்ஹெய்ல் பாப்கோவ்விற்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்ய போலீஸ் அதிகாரி அலெக்ஸான்டர் ஷிக்னெவ், பாப்கோப் மீது நடத்தப்பட்ட உளவியல் பரிசோதனையில் அவருக்கு ஹோமிஸைடோமேனியா என்று அழைக்கப்படும் கொலை செய்யும் பித்து மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி