மத்திய அரசு ஊழியர்களின் தேசிய பென்ஷன் திட்டத்துக்கான அரசு பங்களிப்பு 14% ஆக உயர்வு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய பென்ஷன் திட்ட (என்பிஎஸ்) பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டம் 2004ம் ஆண்டு ஜனவரியில் கொண்டுவரப்பட்டது. இதன்பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டத்துக்காக அடிப்படை சம்பளத்தில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை மத்திய அரசு முதலீடு செய்யும். இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், தேசிய பென்ஷன் திட்டத்தில் அரசின் பங்களிப்பு தொகையை 4 சதவீதம் உயர்த்தி 14 சதவீதமாக நிர்ணயிக்க கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் தேர்தல் நடந்ததால் இந்த அறிவிப்பு அப்போது வெளியிடப்படவில்லை என்றார்.

தேர்தல்கள் முடிந்த நிலையில் இந்த அறிவிப்பை அரசு அதிகாரப்பூர்மாக வெளியிட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டத்துக்கு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு பங்களிப்பு 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஊழியர்களின் பங்களிப்புக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சியின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. இந்த திட்டத்தில் அரசு வழங்கும் 10 சதவீத பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுளளது. இதன்மூலம் ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்ஷன் தொகை வெகுவாக உயரும். ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வூதிய தொகையில் 40 சதவீதத்தை மொத்தமாக பெற முடியும். மத்திய அரசு பங்களிப்பு 14 சதவீதமாக உயர்ந்துள்ளதால் ஓய்வூதிய தொகையில் இனி 60 சதவீதத்தை மொத்தமாக பெற முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: