திருவனந்தபுரம்: கொல்லம் அருகே மகளின் பேஸ்புக் காதல் விவகாரத்தில் அவரது தாயை காதலன் கத்தியால் குத்திக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொல்லம் அருகே குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ். துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மேரிகுட்டி வர்க்கீஸ். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் லிசா மும்பையில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் லிசாவுக்கும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சதீஷ்(27) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி பேஸ்புக் மூலம் சாட்டிங் செய்து வந்தனர்.
இந்தநிலையில் லிசாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து சதீஷ் உடனான பழக்கத்தை லிசா குறைத்து கொண்டார். ஆனால் சதீஷ் காதலில் இருந்து பின்வாங்க வில்லை. இந்தநிலையில நேற்று முன்தினம் சதீஷ் மதுரையில் இருந்து வாடகை காரில் குளத்துப்புழாவுக்கு வந்தார். பின்னர் லிசா வீட்டிற்கு சென்று கொரியர் வந்திருப்பதாக கூறி கதவை தட்டினார். அப்போது வீட்டில் லிசாவின் தாய் மேரி குட்டி வர்க்கீஸ் மட்டும் இருந்தார். அவர் கதவை திறந்தபோது சதீஷ் தன்னை பற்றி அறிமுகம் செய்தார். பின்னர் லிசாவும், நானும் காதலிக்கிறோம். அவளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு மேரி குட்டி வர்க்கீஸ் மறுத்துள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேரிகுட்டி வர்க்கீஸ் சரமாரியாக குத்தினார். வலியால் துடித்த அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே பொதுமக்கள் கத்தியுடன் நின்ற சதீசையும், அவரது கார் டிரைவர் சித்திரை செல்வத்தையும் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்தநிலையில் மேரிகுட்டி வர்க்கீசை உறவினர்கள் மேல்சிகிச்சைக்காக அஞ்சலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேரிகுட்டி இறந்தார். போலீசார் சதீஷ், சித்திரை செல்வன் ஆகியோரை கைது செய்து கொல்லம் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் கொல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி