பல்லாவரம்: பணம் வாங்கி ஏமாற்றியதால் நண்பனை கூலிப்படை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பல்லாவரம் அடுத்த ஈசா பல்லாவரம், பெரிய பாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (31). தனது வீட்டின் அருகே கோழிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு தொழில் ரீதியாக வந்து சென்ற இஸ்மாயில் (42) என்பவருடன் தமீம் அன்சாரிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் தொழில் ரீதியாக பழகிய இருவரும், பின்னர் இணை பிரியாத நண்பர்களாகினர். இதை பயன்படுத்தி தமீம் அன்சாரி, இஸ்மாலிடம் அதிக அளவு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அதை திருப்பி தராததால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். ஒரு கட்டத்தில், ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். தன்னை ஏமாற்றிய தமீம் அன்சாரியை பழிவாங்க இஸ்மாயில் முடிவு செய்தார். அதன்படி, கடந்தாண்டு கூலிப்படையை வைத்து தமீம்அன்சாரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த தமீம் அன்சாரி, நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.