சென்னை: வேளச்சேரி, லட்சுமி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (66). ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ. நேற்று முன்தினம் தேவராஜ் உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்பதற்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 37 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப்பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது.
* தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த தாம்பரம், கைலாசபுரம் பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி தேவி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. * சென்னை எம்ஜிஆர் நகர் அண்ணா மெயின் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜமுத்து (38) என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் வேனை மர்ம ஆசாமிகளை கொள்ளையடித்து சென்றனர்.
* ஈச்சம்பாக்கம் கடற்கரையில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் கிடந்தது. * சொத்து தகராறு காரணமாக விருகம்பாக்கம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சஹானா(28) என்பவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, சஹானாவின் கணவர் குருதாஸ் மற்றும் அவரது சகோதரி கவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.* சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த புளியந்தோப்பு பி.கே.கே.காலனியை சேர்ந்த சதீஷ் (எ) அழுக்கு சதீஷ் (எ) சதீஷ்குமார் (30), பெரம்பூர் சேமாத்தம்மன் காலனியை சேர்ந்த பிரபாகரன் (எ) சுனில் (24), கண்ணகிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சின்னவர் (26), திரிசூலம் வேம்புலியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ்வரன் (எ) ராஜா (34), அயனாவரம் வள்ளலார் தெருவை சேர்ந்த சரவணன் (எ) சரண்(24) அகிய 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.* ஜெயலலிதா நினைவு நாளில், அரசு நிதி பெற்று தருவதாக கூறி அம்பத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த பூ வியாபாரி ராதா (50) என்பவரிடம் இருந்து 4 சவரன் நகைகளை இளம் பெண் ஒருவர் நூதன முறையில் கொள்ளையடித்து சென்றார். * பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பெலிக்ஸ் அந்தோணிராஜ் (53) படுகாயமடைந்தார்.* நங்கநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (37) என்பவரிடம் 10 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய ஆவடியை சேர்ந்த ரஜினி (எ) அன்புச்செல்வன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.* வேளச்சேரி அடுத்த நன்மங்கலம், வீரபாண்டி நகரை சேர்ந்த கல்லூரி மாணவன் அஜித் (18) என்பவரை பணம் கேட்டு அவரை கத்தியால் வெட்டிய நன்மங்கலம், சித்தார்த் நகரை சேர்ந்த கார்த்தி (எ) ஆந்தை கார்த்தி (27), நன்மங்கலம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த சந்திரன் (எ) கஞ்சா சந்திரன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 9.50 லட்சம் ஒப்படைப்புசென்னை பர்மாபஜாரில், ஜாபர் என்பவர் நடத்தி வரும் செல்போன் கடையில் பணியாற்றும் ரஷிக்கான் என்பவர் கடந்த 1ம் தேதி இரவு மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அவரை தாக்கி 60 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வடக்கு கூடுதல் காவல் ஆணையர் தினகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: செல்போன் கடைக்காரரிடம் கொள்ளையடித்த குற்றவாளிகளை பிடிக்க, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பர்மாபஜார் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை தொடர்பாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கிஷோர், பொன்னேரியை சேர்ந்த சதீஷ், சென்னை ராயபுரத்தை சேர்ந்த ஷேக்தாவூத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 9.50 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளிகள் சிக்கினால்தான் மீதி பணத்தையும் பறிமுதல் செய்ய முடியும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் செல்போன் கடை உரிமையாளர் ஜாபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி