டெல்லி: கஜா புயல் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு கஜா புயல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் இந்த கஜா புயல், 2, 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனால் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். வரும் 15ம் தேதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து வரும் 14ம் தேதி மாலை முதல் தெற்கு ஆந்திரா- வடதமிழகத்திற்கு இடையே, இந்த கஜா புயல் கரையை கடக்கும் என தெரிவித்தது. இதனால் ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயலின் வேகம் குறைந்ததால் ஆந்திராவுக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி