சென்னை: இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டியில் விளையாட உள்ளதால் ஐஎஸ்எல் 5வது சீசன் தொடரில் 2வது முறையாக மீண்டும் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய கால்பந்து தொடராக மாறியுள்ளது ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக். முந்தைய சீசன்கள் பெரிய இடைவெளி இன்றி 5, 6 மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், நடப்பு 5வது சீசனுக்கு முழுமையாக போட்டி அட்டவணை வெளியிடப்படவில்லை. அதுமட்டுமின்றி அறிவிக்கப்பட்ட அட்டவணையிலும் 2 பெரிய இடைவெளி உள்ளது. காரணம் ஐஎஸ்எல் அணிகளில் இடம் பிடித்துள்ள பல வீரர்கள் இந்திய அணியிலும் இடம் பெற்றிருப்பதுதான். இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாட வசதியாக இந்த இடைவெளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சீசனின் முதல் போட்டி செப். 29ம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. தொடர்ந்து 9 லீக் ஆட்டங்கள் நடந்த நிலையில் அக். 8-16 வரை 9 நாட்களுக்கு இடைவெளி விடப்பட்டது. இந்திய அணி சீனாவுடன் நட்பு ரீதியிலானபோட்டியில் விளையாடியதே இதற்கு காரணம்.