மதுரை: வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கஜா புயலை சமாளிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறினார். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அவர், போலீஸ், தீயணைப்பு, ஊர்காவல்ப்படை மற்றும் பல்வேறு மீட்பு படையினர் என 9500 பேர் தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.
ரெட்அலர்ட் என்பது நிர்வாக ரீதியான அறிவிப்பே தவிர இதனை நினைத்து மக்கள் பீதியோ, அச்சப்படவோ தேவையில்லை. புயலை சமாளிக்க அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்றார். எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய்த்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு பகுதிகளை துல்லியமாக கணித்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
4,399 இடங்கள் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே கடலுக்குள் சென்றவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி