1199 பதவிக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: தமிழகம் முழுவதும் 6.26 லட்சம் பேர் எழுதினர்

சென்னை: குரூப் 2 பதவியில் 1199 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று காலை நடந்தது. இத்தேர்வை சுமார் 6.26 லட்சம் பேர் எழுதினர். ஒரு பதவிக்கு 523 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் அடங்கிய தொழில் கூட்டுறவு அதிகாரி பணியில் 30 இடம்,  சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி- 12, வேலை வாய்ப்புதுறை இளநிலை அதிகாரி-16, சிறைத்துறை பயிற்சி அதிகாரி -18, தொழில்துறை உதவி ஆய்வாளர்- 26, சப்-ரிஜிஸ்டார்(கிரேடு 2)- 73, நகராட்சி ஆணையர்(கிரேடு 2)- 6,  உதவி பிரிவு அதிகாரி(சட்டத்துறை)- 16, உதவி பிரிவு அதிகாரி(நிதித்துறை)- 16, தணிக்கை ஆய்வாளர்(இந்து சமய அறநிலையத்துறை)- 31, மூத்த ஆய்வாளர்(பால்வளத்துறை)- 48, கைத்தறி துறை இன்ஸ்பெக்டர்- 23, மூத்த  ஆய்வாளர்(கூட்டுறவுத்துறை)- 599 உள்ளிட்ட 23 துறைகளில் காலியாக உள்ள 1,199 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்டது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9ம் தேதி உடன் கால அவகாசம் முடிந்தது. இதில், 6 லட்சத்து 35 ஆயிரத்து 212 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 8242 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இத்தேர்வை எழுத சுமார்  6.26 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 6 லட்சத்து 26 ஆயிரத்து 970  பேர் எழுதினர். இதற்காக மாநிலம் முழுவதும் 2268 தேர்வு மையங்கள்  அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு பணியில் 39,188 ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னையில் மட்டும் 247 மையங்களில் 64,309 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.  இந்த தேர்வை தமிழில் 4  லட்சத்து 80 ஆயிரத்து 863 பேரும், ஆங்கிலத்தில் 1 லட்சத்து 45  ஆயிரத்து 858 பேரும் எழுதினர்.

சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், அண்ணாநகர், எழும்பூர், பெரம்பூர், வடபழனி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் தேர்வுகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு  தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. காலை 10 மணிக்கு தான் தேர்வு என்றாலும் காலை 8 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வந்திருந்தனர். சிலர் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்திருந்தனர்.  அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில் பெற்றோரிடம் தங்கள் குழந்தையை ஒப்படைத்து சென்றனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை  விதிக்கப்பட்டிருந்தது. மோதிரம் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு  கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.

தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 254 பறக்கும் படையினர் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கூடுதலாக தேர்வு நடைபெறும் போது ஆய்வு  மேற்கொள்ள 2268 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 247 முதன்மை கண்காணிப்பாளர்களும், 3230 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில முழுவதும் பதற்றமான 11 இடங்களில் தேர்வை  சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. அந்த மையங்களில் கூடுதலாக போலீசார் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2,268 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு மையங்களில் வீடியோ மூலம்  பதிவு செய்யப்பட்டது. தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தேர்வு நடைபெறும் 3 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 400 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.  இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கப்படும்.  சாதாரணமாக ஒரு பதவிக்கு குறைந்தபட்சம் 50 பேர் தான் போட்டியிடுவார்கள். ஆனால், குரூப் 2 தேர்வில் 1 பதவிக்கு 523 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், கடும் போட்டி நிலவியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: