சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல், முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது. இதில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 3 இடங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 2 போலீசார், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் நாளை நடைபெறும் ஓட்டுப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று மாவோயிஸ்ட்கள் நடத்திய குண்டுவெடிப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கரின் காங்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் அடுத்தடுத்து 6 குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் நக்சல் எதிர்ப்புப் படையின் உதவி ஆய்வாளர் மகேந்தர் சிங் பலத்த காயமடைந்தார். காயமடைந்த அவரை ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூருக்குக் கொண்டுசென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார். குண்டுவெடிப்பை அடுத்து காங்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களின் மறைவிடங்களில் நக்சல் எதிர்ப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.அதைத்தொடர்ந்து பீஜப்பூர் மாவட்டத்தில் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அங்குக் காவல்துறையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் சத்தீஸ்கரில் பரபரப்பான சூழலுக்கு இடையே நாளை சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பாதுகாப்பு கருதி துணை ராணுவத்தினர், போலீசார் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி