மபி தேர்தல் பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை களமிறக்குகிறது பாஜ

போபால்: மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் 28ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை ஈடுபடுத்த பாஜ திட்டமிட்டுள்ளது.மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து. இம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் கடந்த மூன்று முறை அதாவது 15 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. 4வது முறையாகவும் ஆட்சியை தக்கவைக்க திட்டமிட்டு, அதற்கென பல்வேறு வியூகங்களை பாஜ வகுத்து வருகிறது. இதனிடையே, கடந்த 1993 முதல் 2003 வரை அங்கு ஆட்சி புரிந்த காங்கிரஸ், மீண்டும் அங்கு ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மக்களை கவரும் வகையில் தனது தேர்தல் பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை களமிறக்க பாஜ திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநில பாஜ செய்தி தொடர்பு நிர்வாகி ரஜ்னிஷ் அகர்வால் நேற்று அளித்த பேட்டியில், “மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்திலும், கட்சி விளம்பரத்திற்காகவும் மேஜிக் நிபுணர்களை வாடகைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளோம். மேஜிக் நிபுணர்கள் கிராமம், நகரங்களின் சந்தை பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் வாக்காளர்களை கவர மேஜிக் காட்சிகளை நடத்துவார்கள். கடந்த 1993-2003க்கு இடைபட்ட 10 ஆண்டுகளில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இருந்த மோசமான சாலைகள், மின் விநியோகம் மற்றும் அடிப்படை வசதிகளின் மோசமான நிலை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: