சென்னை: தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து இலங்கை பிரதமரிடம் இந்தியா வலியுறுத்தாதது ஏன் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: டில்லியில் நேற்று நடைபெற்ற இந்திய, இலங்கை பிரதமர்கள் இடையிலான சந்திப்பில், இலங்கை சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்த பேச்சுக்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. இந்தியா, இலங்கை இடையிலான பேச்சுக்களின்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயமே மீனவர் பிரச்னை தான். ஆனால், அது குறித்து பேசப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.