கொடைக்கானல்: இஸ்ரேல் நாட்டவர்கள் விரைவில் வர உள்ளதால் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என, அதிரடிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடந்த 2017, ஆக.11ம் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மஞ்சித் மெஹபூப், சாலிக் முகமது, ரஷீத்அலி, சக்குவான், ஜசீம், ராம் சத், சஜிர் மங்கல சேரி, மொயின் ஆகிய 8 பேர் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கி, இங்குள்ள இஸ்ரேல் நாட்டவர்களை கொல்ல திட்டமிட்டது தெரிந்தது. இதைத்தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் நிரந்தர போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. வட்டக்கானல் பகுதிக்கு வரும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூத மதத்தினர் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை தங்கியிருந்து சிறப்பு வழிபாடு நடத்துவர். இதனை நடத்த இவர்களின் மதத்தலைவரான காபாத் வந்து செல்வார்.