சென்னை : பஞ்சாபில் ரயில் விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியப்போக்குதான் காரணம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே, ஜோடா பதாக் என்னும் இடத்தில் கொண்டாடப்பட்ட தசரா திருவிழா நிகழ்ச்சியின் போது, இடப்பற்றாக்குறையால் தண்டவாளத்தில் இருந்து நிகழ்ச்சியை கண்ட பொதுமக்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. விழாவிற்கு வந்த பொதுமக்களின் எண்ணிக்கையையும், பாதுகாப்பையும் முன்னரே கணிக்காமல், விழா நடத்த அந்த இடத்திற்கு அனுமதி அளித்த அதிகாரிகள், இரயில்வே துறை அதிகாரிகள், பஞ்சாப் மாநில அரசு மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் ஆகியோரின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கான முக்கிய காரணம். பொறுப்பற்ற தன்மையுடன் பணிபுரிந்த அதிகாரிகளையும், இவ்விபத்திற்கு காரணமானவர்களையும் வன்மையாக கண்டிப்பதுடன், இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.