இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போராடி தோற்றது சென்னையின் எப்சி

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், சென்னையின் எப்சி அணி 3-4 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணியிடம் போராடி தோற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், நார்த்ஈஸ்ட் வீரர் ரோலின் போர்ஜஸ் தடுக்க முனைந்த பந்து ‘ஓன் கோல்’ ஆக அமைய சென்னையின் எப்சி முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 15வது நிமிடத்தில் தோய் சிங் அபாரமாக கோல் அடிக்க 2-0 என சென்னை அணியின் முன்னிலை அதிகரித்தது. பதில் தாக்குதல் நடத்திய நார்த்ஈஸ்ட் அணியின் பார்தலோமி ஓக்பெச்சே 29வது நிமிடத்தில் கோல் அடித்தார். 32வது நிமிடத்தில் தோய் சிங் மீண்டும் கோல் அடிக்க, சென்னையின் எப்சி 3-1 என முன்னிலை வகித்தது.

எனினும், உறுதியுடன் போராடிய நார்த்ஈஸ்ட் அணி அடுத்தடுத்து கோல் அடித்து சென்னை அணியை திணற வைத்தது. அந்த அணியின் பார்தலோமி ஹாட்ரிக் கோல் (29வது, 37வது, 39வது நிமிடம்) போட்டு அசத்தினார். இடைவேளையின்போது இரு அணிகளும் 3-3 என சமநிலை வகித்தன. இரண்டாவது பாதியில் ரோலின் போர்ஜஸ் (54வது நிமிடம்) வெற்றி கோல் அடித்து ‘ஓன் கோல்’ தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டார்.

ஆட்ட நேர முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணி வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. அந்த அணி 3 போட்டியில் 2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்க, சென்னையின் எப்சி ஹாட்ரிக் தோல்வியுடன் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: