திருக்குறள் பரப்பும் காகித பென்சில்!

பென்சிலைக் கொண்டு காகிதங்களில் எழுதலாம். காகிதங்களைக் கொண்டு பென்சிலைத் தயாரிக்க முடியுமா? ‘முடியும்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறார் சித்தார்த்தன். பென்சிலுக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கிறது இவரது முயற்சி. தவிர, இப்பென்சில் ஒவ்வொன்றும், ஒரு திருக்குறளைத் தாங்கி வந்து குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்கிறது. இந்த ‘திருக்குறள் பென்சிலு’க்கு அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனி மவுசு.‘‘திருக்குறள் பென்சிலுக்கு அப்பா தான் முழு முதற்காரணம்...’’ என்று நெகிழ்வாக ஆரம்பித்தார் சித்தார்த்தன்‘‘சொந்த ஊர் திருநெல்வேலி. அப்பா இசை இறை சேரலாதன்.

திருக்குறள்னா அவருக்கு உயிர். திருக்குறள் பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கார். அதில் பல கட்டுரைகள் தமிழின் பிரபலமான பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கு. அரசு வேலையில அப்பா இருந்ததாலே ஊர் ஊரா மாறிகிட்டே இருப்போம். கடைசியில மதுரையில செட்டில் ஆகிட்டோம். எனக்கு அக்காவும், அண்ணனும் இருக்காங்க. சின்ன வயசுல காலையில எழுந்தவுடன் நாங்க மூவரும் அப்பாகிட்ட பத்து திருக்குறளை மனப்பாடமா சொல்லணும். அப்படிச் சொன்னாதான் எங்களுக்கு தேன் கலந்த சர்பத் கிடைக்கும். டீ, காபி எல்லாம் எங்க வீட்டுல கிடையாது. எல்லாமே தமிழ் மரபுப்படி தான். ஸ்கூலுக்குப் போகும்போதே 1330 குறளும் எங்களுக்கு அத்துப்படி. திருக்குறளைச் சொல்லாம, படிக்காம ஒரு நாளும் கழிந்ததே இல்லை.

திருக்குறளை மந்திரமா சொல்லித்தான் எனக்கு கல்யாணமே நடந்ததுனா பாத்துக்குங்க...’’ என திருக்குறளுக்கும் தனது குடும்பத்துக்கும் உள்ள நெருங்கிய பந்தத்தை விவரித்த சித்தார்த்தன் தொடர்ந்தார்.‘‘படிப்பு முடிஞ்சதும் ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டே ‘குறள் நெறி’னு ஒரு பதிப்பகம் தொடங்கி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வந்தேன். இடையில அப்பா இறந்துட்டார். பிசினஸும் சரியா போகலை. அதனால பதிப்பகத்தை மூடிட்டேன். வீட்டுல மாட்டியிருக்குற அப்பாவோட போட்டோவைப் பார்க்கறப்ப எல்லாம் திருக்குறளும், குழந்தைப்பருவமும் தான் முதல்ல ஞாபகத்துக்கு வரும். அப்பா மாதிரி திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கணும்னு தோணுச்சு.

பாடப்புத்தகத்துல இருந்தாலும் அதை குழந்தைங்க பரீட்சைக்காக மட்டுமே படிக்கிறாங்க. புத்தகமா போட்டு மலிவான விலையில் கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டங்கிறாங்க. குழந்தைகளோடு நெருக்கமா இருக்குற ஒரு பொருளோடு திருக்குறளையும் சேர்த்துக் கொடுத்தா சுலபமா அது அவங்களோடு சேர்ந்திடும்னு நம்பினேன். அப்படி நெருக்கமா இருக்குற ஒண்ணுண்ணா அது பென்சில் தான். இப்படித்தான் இந்த திருக்குறள் பென்சில் உருவாச்சு...’’ என்றவர் இதை காகிதத்தில் தயாரிப்பதற்கான காரணங்களையும் பட்டியலிட்டார்.‘‘பொதுவா பென்சில்களை மரத்தில் இருந்துதான் செய்றாங்க. செயற்கையா சில வேதிப்பொருட்களைக் கொண்டும் தயாரிக்கிறாங்க. இதனால இயற்கை பெருமளவுல அழிக்கப்படுது.

நாம செய்யப் போகிற காரியம் இயற்கையைப் பாதிக்காத வகையில இருக்கணும்ங்கிற விஷயத்துல உறுதியா இருந்தேன். இதையும் திருக்குறள்ல இருந்துதான் கத்துக்கிட்டேன். சீனா போன்ற நாடுகள்ல காகிதங்களைப் பயன்படுத்தி பென்சில்கள் தயாரிப்பதைப் பற்றி கேள்விப்பட்டேன். நாமும் ஏன் அந்த மாதிரி செய்யக்கூடாதுனு எண்ணி இதுல இறங்கினேன். ஆரம்பத்துல சரியா வரலை. போகப்போக பிரமாதமா வந்தது. இப்ப முற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களைக் கொண்டு பென்சில்களைத் தயாரிக்கிறோம். உண்மையில என்னோட நோக்கம் பென்சிலைத் தயாரிப்பது அல்ல; அதன் மூலமா திருக்குறளைப் பரப்புவது.

அதனால பென்சிலோட மேல்புறத்துல திருக்குறளைப் பிரின்ட் செய்து, எழுத்து அழியாத அளவுக்கு லேமினேட்டும் செய்றோம்...’’ என்கிற

சித்தார்த்தனின் திருக்குறள் பென்சில் 1330 குறள்களுடன் கிடைக்கிறது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு அதிகாரத்தை தாங்கி வரும் 10 பென்சில்கள். இதுபோக எளிதான கணக்கு வாய்ப்பாடு, போக்குவரத்து விதிகள், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளைத் தாங்கியும் பென்சில்கள் வருகின்றன.‘‘முகநூல் வழியாவும் ஆன்லைனிலும் வேண்டியவர்களுக்கு அனுப்பறோம். கடைகளுக்குக் கொடுப்பதில்லை. அமெரிக்கா, சிங்கப்பூர்ல இருக்குற தமிழ்ப் பள்ளிகள் நிறைய ஆர்டர் கொடுத்து வாங்கியிருக்காங்க. அங்கே இந்த பென்சிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கு. திருக்குறள் எல்லா குழந்தைகளையும் சென்றடையணும்...’’ என்றார் நிறைவாக.

பென்சில் வரலாறு!

பென்சிலைப் பற்றி பல வரலாறுகள் இணையத்தில் உலா வருகின்றன. ‘‘இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ரோமானியர்களின் காலத்திலேயே பென்சில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அது நீளமான கம்பி வடிவத்தில் இருந்தது...’’ என்கின்றனர் சிலர். இன்னொரு பிரிவினர் ‘‘16-ம் நூற்றாண்டில் இத்தாலியில் மரத்தாலான பென்சில் கண்டுபிடிக்கப்பட்டது...’’என்கின்றனர். ஆனால், ‘‘1795-இல் பிரான்ஸை சேர்ந்த ஓவியரான நிக்கோலஸ் கான்டே என்பவர் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பென்சிலுக்கு காரணகர்த்தா...’’ என்கின்றனர் வேறு சிலர். ‘‘பென்சிலின் மையத்தில் ‘கிராஃபைட்’ என்கிற வேதிப்பொருள் உள்ளது. இது இங்கிலாந்தில் உள்ள சீத்வைட் பள்ளத்தாக்கில் தான் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிராஃபைட்டை களிமண்ணுடன் சேர்த்து செங்கல் சூளையில் பென்சிலை உருவாக்கியது நிக்கோலஸ் தான்...’’ என்று உறுதியாகச் சொல்கின்றனர் அந்த வேறு சிலர்.

- த.சக்திவேல்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: