திருமலை: ஆந்திர மாநிலம் புத்தூர் சோதனைச்சாவடி அருகே செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் 80க்கும் மேற்பட்டோர் வருவதை அறிந்த திருப்பதி போலீசார் அந்த லாரியை நிறுத்த முயன்றனர்.அப்போது மர்மநபர்கள் லாரியை நிறுத்தாமல் திருப்பதியை நோக்கி வேகமாக சென்றனர். தகவல் அறிந்த காஜுலமண்டியம் போலீசார் தடுப்பு வேலியை அமைத்து லாரியை நிறுத்த முயன்றனர். அப்போது மர்மநபர்கள் தடுப்பு வேலியை இடித்து கொண்டு சந்திரகிரி நோக்கி சென்றனர். பின்னர் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது லாரியில் இருந்த அனைவரும் வேகமாக கீழே குதித்து தப்பியோடினர். இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜவ்வாதுமலை பகுதியைச் சேர்ந்த வேதநாயகம், கார்த்தி, சக்கரவர்த்தி, கோவிந்தசாமி, ரவி, துரைசாமி, திருப்பதி ஆகிய 7 பேரை பிடித்தனர். அவர்களை திருப்பதி ரூயா மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் லாரியுடன் சமையல் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து செய்து 7 பேரையும் கைது செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.