கும்பகோணம்: தமிழக முதல்வர் எடப்பாடி உட்பட 33 அமைச்சர்கள் மீது எண்ணற்ற ஊழல் புகார்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றாக வெளிவரும் என்று கும்பகோணத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றி கனவு பலிக்காது என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். நான் அதிமுக பொருளாளராக இருந்தபோது மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் தம்பி உதயகுமார். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் முடியும் வரை எதையாவது உதயகுமார் பேசி கொண்டு தான் இருப்பார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் பல அமைச்சர்கள் இதுபோன்று வீரவசனங்கள் பேசி சூடு கண்டார்கள். அவர்களுக்கு திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் மக்கள் பதிலடியை கொடுப்பர். முதல்வர் உட்பட 33 அமைச்சர்கள் மீதும் எண்ணற்ற ஊழல் புகார்கள் உள்ளன. அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவரும்போது மக்கள் தெரிந்து கொள்வர்.