சென்னை: 20 லட்சம் டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இங்கு நிலக்கரி மூலம் நாள் ஒன்றுக்கு 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தேவைப்படும் நிலக்கரியை மத்திய அரசு மூலம் மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இருந்து மின்சார வாரியம் வாங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய நிலக்கரியை மத்திய அரசு வழங்காததால் தமிழக அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முன்னதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூடுதல் நிலக்கரி வழங்குமாறு வலியுறுத்தி இருந்தார். அதனை அடுத்து தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியும், மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்துக்கு நாள்தோறும் 72,000 டன் நிலக்கரி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து இருந்தார்.
இதனை தொடர்ந்து கூடுதல் நிலக்கரி தேவைப்படுவதால் வெளிநாடுகளில் 30 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இதனை அடுத்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி