கரூர்: கரூர் மாவட்டத்தில் எலுமிச்சை வரத்து குறைந்ததால் விலை கிலோ 100ஐ தாண்டிவிட்டது. கரூர் மாவட்டத்திற்கு உழவர்சந்தைகள், பழமுதிர் நிலையங்கள், கடைகளுக்கு எலுமிச்சைப்பழங்கள் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மணப்பாறை சந்தைகளில் இருந்து வரவழைக்கப்படுகிறது. கடந்த கோடையின்போது எலுமிச்சை விலை கிலோ 100ஐ தாண்டியது. அதன்பின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. 30 வரை உழவர்சந்தைகளில் விற்கப்பட்டது. கடைகளில் கிலோ 50என்ற அளவில் விற்பனை செய்தனர். தற்போது கடந்த சில நாட்களாக எலுமிச்சை விலை கிடுகிடுவென உயர்ந்துகொண்டே வருகிறது. நேற்று உழவர் சந்தைகளில் கிலோ 90க்கு விற்பனையானது. மொத்த காய்கறிகடைகளில் 130 எனவும், கடைகளில் 150க்கும் விற்பனை செய்தனர்.