மாஸ்கோ: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ரஷ்யாவின் துணை பிரதமர் யூரி போரிசாவ் ஆகியோர் வர்த்தகம், முதலீட்டில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா - ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் இருதரப்புக்கும் இடையிலான இந்த கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகியவை பற்றி ஆலோசிப்பதற்கான இந்திய - ரஷ்யா 23வது ஆலோசனை கூட்டம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய அரசு சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், ரஷ்யாவின் சார்பில் துணை பிரதமர் யூரிவ் போரிசாவும் கலந்து கொண்டனர்.