தற்கொலை விஷயத்தில் தமிழ்நாட்டின் நிலவரம்

இந்தியாவைப் பொறுத்தவரை தற்கொலைகள் அதிகம் ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக, கடந்த 20 வருடங்களில் தற்கொலை விகிதம் தமிழ்நாட்டில் அதிகமாகி இருக்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால் தேர்வு பயம், காதல் தோல்வி, தொழில் நஷ்டம், குடும்பத் தகராறு என்று  ஒற்றை காரணம் சொன்னாலும், ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால்தான் தற்கொலைகள் நடக்கின்றன. இதை Bio, psycho, social problem என்று உளவியலாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.

அதாவது, உடல்ரீதியான பிரச்னைகள், மன நலப் பிரச்னைகள், போதைப்பழக்கங்கள், சுற்றுப்புறச்சூழலான சமூக, குடும்ப  உறவுகளில் ஏற்படும் தகராறுகள், பணப்பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் தற்கொலை மரணங்கள் நடக்கின்றன.  முக்கியமாக, ‘எல்லா வழிகளுமே அடைக்கப்பட்டு விட்டன’ என்று நினைப்பவர்கள், ‘இனி ஒன்றும் செய்வதற்கு  வழியில்லை’ என்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். உணர்வுகளை புரிந்துகொள்ள யாரும் இல்லை என்கிற காரணத்தால்தான் தற்கொலை மரணங்கள் நிகழ்கின்றன.

ஹெல்ப் லைன்

தற்கொலை தடுப்பு முயற்சியில் ஸ்நேகா என்ற தன்னார்வ தடுப்பு மையம் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. விழிப்புணர்வு  முகாம்கள், நிகழ்ச்சிகள், ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான  ஸ்நேகா, தனது 24 மணி நேர ஹெல்ப்லைனான 044- 2464 0050 என்ற எண்ணிலும், இ-மெயில் மூலமாகவும், அலுவலகத்தில் நேரடியான கவுன்சலிங் மூலமும் உதவிகள் செய்து வருகிறது.

ஒரு போன் கால் மூலம் ஸ்நேகா எப்படி ஒருவரின் தற்கொலையைத் தடுக்கிறது?

‘‘மனம் உடைந்த நிலையில்தான் போன் செய்கிறார்கள். எனவே, அவர்கள் மனதின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் வேலையைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். அவர்களின் பேச்சில் குறுக்கிடுவதோ, அறிவுரை சொல்வதோ கிடையாது. பொறுமையாக அவர்களின் துயரங்களை கேட்டுக் கொள்கிறோம். இன்றைய அவசர வாழ்வில் ஒருவர் சொல்வதைக் கேட்பதற்கு இன்னொருவருக்கு நேரம் இல்லை. யாராவது ஒருவர் மனம் கசந்து உங்களிடம் பேசினால், அவர் சொல்வதைப் பொறுமையுடன் கவனியுங்கள். அவர்களை காயப்படுத்தாமல் ஆலோசனை சொல்லுங்கள். இப்படி மனம் விட்டுப் பேசினாலே நிறைய தற்கொலைகளைத் தடுக்க முடியும்’’ என்று சொல்கிறார்கள்.

- ஜி.ஸ்ரீவித்யா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: