சூர்யா நடிப்பில் இரும்புக்கை மாயாவி: லோகேஷ் கனகராஜ் தகவல்

சென்னை: சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி படத்தை உறுதியாக இயக்குவேன் என டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கூறினார். மாநகரம் படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தைதான் லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தார். இதற்காக சூர்யாவிடம் அவர் ஒரு கதையை சொன்னார். அந்த கதை பிடித்திருந்தாலும் சில காரணங்களால் அந்த படம் உடனே தொடங்கவில்லை. அந்த படத்துக்கு இரும்புக்கை மாயாவி என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளை கவரும் விதமான ஃபேன்டஸி நிறைந்த திரில்லர் கதையாக இதை லோகேஷ் எழுதியிருந்தார்.

இதையடுத்து இந்த படத்துக்கு பதிலாக கார்த்தி நடிப்பில் கைதி படத்தை லோகேஷ் இயக்கி முடித்தார். இந்நிலையில் சூர்யாவை வைத்து படம் இயக்கும் திட்டம் கைவிடப்படவில்லை என லோகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ‘4 வருடங்களுக்கு முன்பு இரும்புக்கை மாயாவி படத்தின் கதையை சூர்யாவுக்கு சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தாலும் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் அந்த படத்தை உடனே உருவாக்க முடியவில்லை. அந்த படத்தின் திரைக்கதையை கடந்த 4 வருடமாகவே மெருகூட்டும் பணி நடந்து வருகிறது. அந்த படம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். கைதி 2 படமும் அதுபோல் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமை பெறாமல் இருக்கிறது. இதில் எது முதலில் தொடங்கும் என தெரியவில்லை. ஆனால் இரும்புக்கை மாயாவி படம் கைவிடப்படவில்லை’ என்றார்.

Related Stories: