தோல்வி மேல் தோல்வி அக்‌ஷய்குமார் படத்தின் 1000 காட்சிகள் ரத்து

புதுடெல்லி: அக்‌ஷய் குமார் நடித்த புது படத்தின் 1000 காட்சிகள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டதால் பாலிவுட் வட்டாரம் அதிர்ச்சியடைந்தது. அக்‌ஷய்குமார் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை ரக்‌ஷா பந்தன் என்ற இந்தி படம் திரைக்கு வந்தது. ஒரு அண்ணன், நான்கு தங்கைகள் இடையே நடக்கும் பாசப்போராட்டமே படத்தின் கதை. குடும்பத்துடன் இந்த படத்துக்கு ரசிகர்கள் வருவார்கள் என படக்குழு நம்பியது. ஆனால் எதிர்பார்த்த வசூல் படத்துக்கு கிடைக்கவில்லை.

வழக்கமாக ஸ்டார் நடிகர்களின் படங்கள் முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே ரூ.20 கோடி முதல் ரூ.27 கோடி வரை வசூலிக்கும். ஆனால் ரக்‌ஷா பந்தன் படம் முதல் நாளில் ரூ.8 கோடியும் இரண்டாவது நாளில் ரூ.6 கோடியும்தான் வசூலித்தது.

இரண்டாவது நாளில் நாடு முழுவதும் இந்த படத்தின் 1000 காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் படக்குழுவும் பாலிவுட் வட்டாரமும் அதிர்ச்சியில் உறைந்தது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முதலிடத்தில் இருந்து வந்தார் அக்‌ஷய் குமார். ஆனால் கடைசியாக அவர் நடித்த பெல்பாட்டம், பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் என 3 படங்களும் படுதோல்வி அடைந்தன. அந்த வரிசையில் இப்போது ரக்‌ஷா பந்தன் படமும் சேர்ந்துள்ளதால், அக்‌ஷய்குமார் தரப்பும் அதிர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே தொடர் தோல்வி காரணமாக, படே மியான் சோட்டே மியான் இந்தி படத்துக்கான சம்பளத்தில் 50 சதவீதம் அக்‌ஷய் குமாருக்கு குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: