திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் போலீஸ் அதிகாரிகளை கொல்ல திலீப் சதி திட்டம் தீட்டியது உண்மைதான் என்று, விசாரணைக்கு ஆஜரான ஒருவர் கூறியதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில், நடிகர் திலீப் உள்பட 5 பேர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்த விசாரணை 4 முறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் விடுமுறை தினமான சனிக்கிழமை நீதிபதி கோபிநாத், நேரடியாக விசாரணை நடத்தினார்.
அப்போது திலீப் உள்பட 5 பேரிடமும், 3 நாள் போலீசார் விசாரணை நடத்தலாம். 27ம் தேதி (வியாழக்கிழமை) விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை திலீப் உள்பட 5 பேரையும் கைது செய்யக்கூடாது என்று நீதிபதி போலீசுக்கு தெரிவித்தார். அதன்படி நேற்று முன்தினமும் இரண்டாவது நாளாக நேற்றும் திலீப் உள்பட 5 பேரும் ஆஜரானார்கள். தொடர்ந்து குற்றப்பிரிவு எஸ்பி மோகன சந்திரன் தலைமையில் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் நாள் திலீப் உட்பட 5 பேரும் அளித்த தகவல்களில் முரண்பாடுகள் இருந்தன.