டிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் கவுதம் கார்த்திக்(31). பழம் பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும், நவரச நாயகன் கார்த்திக் மகன் ஆவார். மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் சினிமா துறையில் நுழைந்தார். இளம் நடிகரான இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

கவுதம் கார்த்திக் அதிகாலையில் சைக்கிளில் உடற் பயிற்சி செல்வது வழக்கம். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டி.டி.கே.சாலையில் செல்லும்போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த வழிப்பறி கொள்ளையர்கள் நடிகர் கவுதம் கார்த்திக்கின் விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.இதை சற்றும் எதிர்பார்க்காத இளம் நடிகர், வழிப்பறி கொள்ளையர்களை தனது சைக்கிளில் பின் தொடர்ந்து வேகமாக சென்றுள்ளார். ஆனால் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் மாயமாகிவிட்டனர்.

இதுகுறித்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் நடந்த டிடிகே.சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பைக்கில் வந்த வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நடிகர் ஒருவரிடம் வழிப்பறி கொள்ளையர்கள் செல்போன் பறித்து சென்ற சம்பவம் சினிமா துறையில் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: